Monday, October 20, 2008

சந்த்ராயன்-1 விண்கலத்தை நிலவுக்கு ஏவுகிறது இந்தியா


இந்தியாவின் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து எதிர்வரும் புதன்கிழமை ‘சந்த்ராயன்-1’ விண்கலம் நிலவுக்கு ஏவப்படவுள்ளது. இதற்கான விநாடிகளை எண்ணும் நடவடிக்கை (கவுண்ட்-டவுன்) இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1,380 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி-சி 11 ரொக்கட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.
வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏதும் ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி புதன்கிழமை பி.எஸ்.எல்.வி. ரொக்கட் விண்ணுக்குச் செலுத்தப்படும். பூமியிலிருந்து 250 கி.மீ தூரத்தை அடைந்தவுடன் சந்த்ராயன் விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சந்த்ராயன் விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கி அதை பூமிலிருந்து மேலும் தூரத்துக்குத் தள்ளுவதற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ரொக்கெட்டுகள் இயங்க இயங்க ஒரு கட்டத்தில் இந்த விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 37,000 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் 73,000 கி.மீயாகவும் அதிகரிக்கும்.
மேலும் ராக்கெட்டுகளை இயக்கி இயக்கி இதன் சுற்றுப்பாதை பூமியிலிருந்து 3,87,000 கி.மீயாக உயர்த்தப்படும். இவையெல்லாம் 11 நாட்களில் நடந்து முடியும். இந்த 3,87,000 கி.மீ. உயரத்தை அடைந்தபின் சந்த்ராயன் விண்கலம் பூமியை ஒரு முழு சுற்று சுற்றி முடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் சந்த்ராயன் விண்கலத்திலிருந்து ஒரு துணை விண்கலம் நிலவுக்குள் இறங்கி, நிலவின் வளி மண்டலத்தையும் தரையிறங்கிய பின் அதன் மண்ணையும் இந்த விண்கலம் ஆய்வு செய்து சந்த்ராயன் விண்கலத்துக்கு தகவல் தரும், அந்தத் தகவலை சந்த்ராயன் வாங்கி பூமிக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகள் சுமார் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
இந்திய-அமெரிக்க அணுவாயுத ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் விண்கலத்தை ஏவும் இந்தியாவின் இந்த முயற்சி முக்கிய இடம்பிடித்திருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments: