வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து 41 பேர் ஏ-9 வீதியூடாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்புத் தேடி 41 பேரும் இரண்டு குழுக்களாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்ததாகவும், முதலாவது குழுவில் 25ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதுடன், இரண்டாவது குழுவில் 4 ஆண்களும், 1 பெண்ணும் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சேமமடு மற்றும் நைனாமடு ஆகிய பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
முதலாவது குழு காலை 8.30 மணியளவிலும், இரண்டாவது குழு பிற்பகல் 12.30 மணியளவிலும் ஓமந்தையைச் சென்றடைந்துள்ளன. வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 39பேர் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு வந்துள்ளனர். மாங்குளம் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே தாம் அங்கிருந்து வெளியேறிக்கூடியதாக இருந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தவார ஆரம்பத்தில் மேலும் 14 பேர் கிளிநொச்சியிலிருந்து கடல்மார்க்கமாக வெளியேறி கடற்படையினார் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து வெளியேறி குடநாட்டுக்குச் செல்பவர்கள் குருநகர் கதியா முகாமில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.