Wednesday, November 26, 2008

புலிகள் இயக்கம் அல்கைதா அமைப்பைவிட பயங்கரமானது - இந்திய அரசாங்கம் தெரிவிப்பு

புலிகள் அமைப்பை அல்கைதா அமைப்பைவிட பயங்கரவாத அமைப்பாக வர்ணித்திருக்கும் இந்திய அரசாங்கம் அத்தகையதொரு பயங்கரவாதக் குழுவுடன் வைத்திருக்கும் எத்தகையதொரு தொடர்பும் சனநாயகத்திற்கு எதிரானதாகவே அமையும் என தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை எச்சரித்துள்ளது. எல்ரிரிஈ யினரது நடவடிக்கைகள் தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான டில்லி நியாய சபையின் முன் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கும் இந்திய அரசாங்கம் எல் ரி ரி ஈ யினரது கொலைக் கலாசாரம் குறித்து தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைக் கொலை செய்ததன் மூலம் மிகப் பயங்கரமான சர்வதேச குற்றத்தைப் புரிந்துள்ள அவ்வியக்கம் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. இந்தியாவிலும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிக வேகமாக வளர்ந்து வருவதாக அண்மையில் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இந்நிலைமை இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அத்திவாரத்திற்கே அச்சுறுத்தலாக இருந்துவருவதாகவும் பல முன்னணி இந்திய ஆங்கில தினசரிகளின் ஆசிரியர் தலையங்கங்களில் தொடர்ந்தும்; எச்சரிக்கப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
சட்டரீதியற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அமைக்கப்பட்ட இந்நியாய சபை அதற்கு முன்வைக்கப்பட்ட பல்வேறு காரணிகளைக் கருத்திற் கொண்டு எல்.ரி.ரி.ஈ அமைப்பை மேலும் இரண்டு வருடங்களுக்கு தடைசெய்தது. 1991ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழ் நாட்டில் வைத்து இந்தியாவின் முன்னால் பிரதம் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடHந்து 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ அமைப்பு முதன் முறையாக தடைசெய்யப்பட்டதோடு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கொரு முறையும் அத்தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.
எல் ரி ரி ஈ யினர் தமக்குத் தேவையான பெற்றோல் டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கடத்திச் செல்வதற்கான தளமாக தமிழ் நாட்டையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகள் தெரிந்து வைத்திருப்பதோடு இந்திய அரசியல் தலைவர்களும் தமிழ் நாட்டின் பெரும்பான்மையான மக்களும் அறிந்துவைத்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் ரி ரி ஈ அமைப்பிலிருந்து தமிழ் நாட்டுக்குள் தப்பிவந்திருக்கும் எல் ரி ரி ஈ உறுப்பினர்களது நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் புலிகள் அமைப்பின் சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்துவருகின்றது. எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி எந்தநேரமும் கைப்பற்றப்படலாமெனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு

கிளிநொச்சி எந்தநேரமும் கைப்பற்றப்படலாமெனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தியை ஜனாதிபதியே அறிவிப்பார் எனக் கூறியுள்ளார். எமது படையினர் கிளிநொச்சி நகரின் எல்லையில் உள்ளனர். விடுதலைப் புலிகள் தமது தளங்களிலிருந்து பின்வாங்கிச் செல்கின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.
மிகவிரைவில் கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிடுவார்கள் என அமைச்சர் கூறினார்.
கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாக எந்தவிதமான கருத்துக்களும் வெளியாகவில்லை.
இதேவேளை, ‘கிளிநொச்சி இதோ நாம் வருகிறோம்’ என்ற கோசத்துடன், கடும் மழைக்கு மத்தியிலும் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல், அடம்பன் வடக்கு, திருமுருகண்டி, புதுமுறிப்பு ஆகிய பிரதேசங்களினூடாக இராணுவத்தினர் கிளிநொச்சியை நோக்கி மூன்று முனைகளில் முன்னேறி வருவதாகவும், ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் இரண்டு தரப்பிலும் அதிகளவு இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் இராணுவத் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதுடன், 70 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது, இராணுவத்தினர் 43 பேரைக் கொன்று 80 பேரைக் காயப்படுத்தியதாக புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இராணுவத்தினர் தாம் கைப்பற்றிய பகுதிகளை தற்போது பலப்படுத்தி வருவதாகவும், படையினருக்கான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப்பொருள் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகள் மேலும் பல குறுக்குப் பதுங்குகுழிகளை அமைத்து வருவதாகவும் தெரியவருகிறது.

பிரபாகரன் பணிப்பின் பேரில் அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம்

வன்னியில் பாரிய மோதல்கள் நிகழும் இந்த வேளையில் ‘தனது 54 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம்’ என புலிகளின் தலைவர் பிரபாகரன் பணித்தமைக்கு அமைய அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் ‘புலிகளின் குரல்’ வானொலியாலும் மற்றும் புலிசார் ஊடகங்களினால் பாரியளவில் முன்னெடுக்கப்படுவது வழமை. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என பிரபாகரன் பணித்துள்ளார். இன்று காலையில் ‘புலிகளின் குரல்’ வானொலியில் சில வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. பின்னர் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து பாடல்கள் மட்டுமே ஓலிபரப்பாகியது.

Tuesday, November 25, 2008

யாழ் கிளாலியில் படையினரின் தாக்குதலில் ஆயுதங்களை கைவிட்டு ஓடிய புலிகள்


படையினரின் 55வது படையணியின் எஸ்எல்எஸ்ஆர் எனப்படும் சிறிலங்கா சிங்க றெஜிமென்ட்டை சேர்ந்த படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் கிளாலி பகுதியில் முன்னேற முயன்ற புலிகளின் அணியொன்று தமது ஆயுதங்களை போட்டு விட்டு ஏ- 9 பாதையின் தெற்கே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவமானது இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் இரண்டு ரி.56 ரக துப்பாக்கிகள், ஒரு ஆர் பி ஜி துப்பாக்கி ஒரு குண்டு துளைக்காத மேல்கவசம் என்பவற்றையும் மீட்டுள்ளனர். இந்த மோதல்களின் போது புலிகளின் தரப்பில் பலர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் உ.பா. வலய சோதனைச் சாவடிகளை இடம்மாற்றுவது பற்றி பரிசீலிக்குக: உயர்நீதிமன்றம்



யாழ் குடாநாட்டின் தெல்லிப்பளை மற்றும் காங்கசேன்துறைக்கு இடையிலான உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனைச் சாவடிகளை பின்நோக்கி நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு உயர்நீதிமன்றம், யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது.

தெல்லிப்பளை மஹாஜனா கல்லூரி, யூனியன் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை ஆதர வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளிகள், வைத்தியர்கள், மாணவர்களின் நலன் கருதி சோதனைச் சாவடிகளை தற்பொழுது இருக்கும் இடங்களிலிருந்து அகற்றி பின்னோக்கி நிகர்த்துவது பற்றி பரிசீலிக்குமாறு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு நீதிமன்றம் கூறியுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா, நீதிபதிகளான சலீம் மர்சூவ் மற்றும் பி.ஏ.ரட்நாயக்க ஆகியோரைக் கொண்ட குழு மேற்கண்டவாறு பணிப்புரை வழங்கியுள்ளது.
அதேநேரம், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 24 குடும்பங்களை மீளக்குடியமர்த்துமாறு பணிப்புரை வழங்கியிருக்கும் உயர்நீதிமன்றம், மீளக்குடியமர்த்துவதற்கு இனம்காணப்பட்ட 133 பேர் மற்றும் 208 பேர் கொண்ட இரண்டு குழுக்களையும் கூடிய விரைவில் மீளக்குடியமர்த்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்த்தல்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட யாழ் மேல்நீதிமன்ற ஆணையாளர் ஆர்.ரி.விக்னராஜா தலைமையிலான ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே 600 மீற்றர் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் 24 குடும்பங்களை மீளக்குடியமர்த்துமாறு உயர்நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
உயர்பாதுகாப்பு வலயத்தில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வுகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், வடபகுதி கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வடபகுதி கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமரசிங்க, யாழ் பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
யாழ் உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மல்லாகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகியோர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களே நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

களுவாஞ்சிக்குடியில் கிளேமோர் தாக்குதல்: 2 இராணுவத்தினர் பலி



மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலை 7.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடி குருமென்வெளிக்கும், எருவில் கோடைமேடு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினரை இலக்குவைத்தே இந்தக் கிளோமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் மீன்பிடித் தடை தளர்த்தப்பட்டது: இராணுவப் பேச்சாளர்


பூநகரி இராணுவத்தினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாடடு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தடை தளர்த்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

வடமேற்குப் பகுதியின் கடற்பகுதி முழுவதும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குடாநாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடையைத் தளர்த்துவதற்கு தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.
இதற்கமைய குடாநாட்டு மீனவர்கள் காலை 6.30 மணிமுதல் மாலை 4 மணிவரை மீன்பிடிக்க முடியும் எனவும், முன்னர் விதிக்கப்பட்டிருந்த கரையிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரம் என்ற தடை நீக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த சில வருடங்களாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை, நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பிற்பகல் 3 மணிவரை கரையிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலான கடற்பகுதியில் மாத்திரம் மீன்பிடிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இதனால் அவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மீன்பிடித் தடை மீனவர்களைப் பாதித்துவிட்டது. பூநகரியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்ததாலேயே இந்தத் தடைகளை நாம் ஏற்படுத்தவேண்டி ஏற்பட்டது” என இராணுவப் பேச்சாளர் கூறினார்.
மீன்பிடித் தடை தளர்த்தப்பட்டிருப்பதால் மீனவர்கள் தமது வருமானங்களை அதிகரித்துக்கொள்ளமுடியும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயகார மேலும் தெரிவித்தார்.
பூநகரி மீட்கப்பட்டிருப்பதால் யாழ் குடாநாட்டின் தீவகப் பகுதி மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தடை நீக்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்திருந்தார்.

Sunday, November 23, 2008

கூட்டமைப்புடன் பேசுமாறு ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனாவது பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தீர்வுகாண முடியாது என இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் கூறியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனாவது பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வருமாறு மன்மோகன் சிங் வலியுறுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் வி.தங்கபாலு அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென இலங்கை அரசாங்கம் உண்மையாக விரும்புகிறதாயின், சமாதான முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படவேண்டுமெனக் கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்குமாயின் அது 13வது திருத்தச்சட்டமூலத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என தங்கபாலு அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

270 படையினரை காணவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை - இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார


பரந்தனை நோக்கி எமது படையினர் முன்னேறிச் செல்கின்றனர். எமது 270 பேர் கொண்ட படையினர் காணாமல் போய் இருப்பதாகவும் அப்படை பிரிவைத் தேடிச் சென்ற மற்றொரு படை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய்யாகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பரந்தனை நோக்கி முன்னேறிச் சென்ற 270 பேரைக் கொண்ட படை அணி ஒன்றை காணவில்லை எனவும் அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் இணைய தளங்களில் செய்தி வெளியாகியிருந்தன. அத்துடன் அப்படை அணியைத் தேடிச் சென்ற மற்றொரு படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் பல படை வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அந்த இணையத்தள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இது குறித்து இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே இச்செய்தியை மறுத்ததுடன் இது ஒரு அப்பட்டமான பொய் எனவும் அவர் கூறினார்.

Saturday, November 22, 2008

திருக்கோவிலில் வீடொன்றின்மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி, ஒருவர் காயம்!


திருக்கோவில் பகுதியில் வீடொன்றின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் திருக்கோவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி இன்றும் 41 பேர் ஓமந்தை வந்தனர்.

வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து 41 பேர் ஏ-9 வீதியூடாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்புத் தேடி 41 பேரும் இரண்டு குழுக்களாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்ததாகவும், முதலாவது குழுவில் 25ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதுடன், இரண்டாவது குழுவில் 4 ஆண்களும், 1 பெண்ணும் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சேமமடு மற்றும் நைனாமடு ஆகிய பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
முதலாவது குழு காலை 8.30 மணியளவிலும், இரண்டாவது குழு பிற்பகல் 12.30 மணியளவிலும் ஓமந்தையைச் சென்றடைந்துள்ளன. வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 39பேர் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு வந்துள்ளனர். மாங்குளம் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே தாம் அங்கிருந்து வெளியேறிக்கூடியதாக இருந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தவார ஆரம்பத்தில் மேலும் 14 பேர் கிளிநொச்சியிலிருந்து கடல்மார்க்கமாக வெளியேறி கடற்படையினார் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து வெளியேறி குடநாட்டுக்குச் செல்பவர்கள் குருநகர் கதியா முகாமில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு விமோசனம் வழங்காத ராஜபக்ஷ அரசாங்கம் -ரணில்


பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் மக்களுக்கு விமோசனங்களை வழங்கவும் முடியாத நிலையில் ராஜபக்ஷ் அரசாங்கம் உள்ளது. இந்த அரசாங்கம் உடனடியாகப் பாராளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இன்று காலை கோட்டேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாதளவுக்கு அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது. நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து தாங்க முடியாத சுமைக்குள்ளாகியுள்ளனர். கடன்பளு அதிகரித்துள்ளது.
இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை 45 டொலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இந்த அரசாங்கமோ எரிபொருள் லீட்டருக்கு 10 செஸ் வரியை விதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday, November 19, 2008

நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்த தினம்


தோழர் பத்மநாபா மக்களை முன்னிறுத்திய, அரசியல் தலைமைத்துவத்தை வலியுறுத்திய தலைவராக திகழ்ந்தார். இன்று ஆயுதங்கள் அதிகாரம் செலுத்தும் எமது சமூகத்தில் அன்றாடம் கொலைகளும், ஆட்கடத்தல்களும் நிகழும் சூழ்நிலையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மக்களின் அபிலாசைகளையும் முன்னிறுத்திய தோழர் பத்மநாபா நினைவுக்கூரப்பட வேண்டியவர். இத்தகைய தலைவர்களை அழித்தே தமிழ் பாசிசம் இன்றைய அவல நிலையை நோக்கி தமிழ்ச் சமூகத்தை இட்டு வந்திருக்கிறது.
தோழர் பத்மநாபா தேசிய ஒடுக்கு முறைகளில் இருந்து இலங்கையின் தமிழர்கள், முஸ்லீம்கள் விடுவிக்கப்படுவதையும் இலங்கையின் சகல இன மக்களிடையேயும் பரந்த ஐக்கியத்தையும் சர்வதேச அளவில் சுதந்திரம், ஜனநாயகம், சமூக சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடும் மக்களுடன் நாம் கரம் கோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்தவர்.
ஆக்கபூர்வமான முறைகளிலேயே அவர் எப்போதும் சிந்தித்தார். மனிதர்களின் சுதந்திரமான நல்வாழ்வு என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர் மறைந்து பல ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வும், பொதுவாகவே இலங்கை மக்களின் வாழ்வு பெரும் நாசத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.

ரெலோ ( சிறீ ) உறுப்பினர்கள் மீதான படுகொலை ஐனநாயக விரோதிகளின் திட்டமிட்ட செயலாகும்!


எமது சகோதர அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கமாகிய ரெலோ ( சிறீ )உறுப்பினர்கள் மீதான படுகொலை என்பது எமது மக்களுக்களுக்கான ஐனநாயக வழிமுறை செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே கருதப்படவேண்டும். மனித நேய விழுமியங்களுக்கு மதிப்பளிக்க மறுக்கும் ஐனநாயக விரோதச் செயலாகவே இந்த படுகொலை சம்பவத்தை நாம் கருதுகின்றோம்.
எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களை புரிந்த விடுதலை அமைப்புக்களில் ரெலோ அமைப்பும் பிரதான பாத்திரத்தை வகித்திருந்த ஒன்றாகும்.
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பு பாசிசப் புலிகளால் தடை செய்யப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் பல நூறு போராளிகள் தெருத்தெருவாக சுட்டுக் கொல்லப்பட்டு அதன் தலைவரான சிறீ சபாராத்தினம் அவர்களும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் ரேலோ அமைப்பு எமது மக்கள் மத்தியில் இருந்து அகன்று விடும் என்றே தமிழின துரோகிகளான புலித்தலைமை எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் வழித்தோன்றல்கள் எனதங்களை அடையாளப்புடுத்தியிருந்த சிலர் தமது தலைவரையே கொன்றொழித்த புலித்தலைமையின் பக்கமே சார்ந்திருந்து வருகின்றனர்.
ஆனாலும், அராஐகங்களுக்கு அடிபணிய மறுத்து எமது மக்களுக்கானஅரசியலுரிமைக்காக ஐனநாயக வழிமுறை நின்று தலைவர் சிறீ சபாரத்தினம்அவர்களது கனவுகளை தமது தோள்களில் சுமந்து வருபவர்கள் ரெலோ ( சிறீ ) அமைப்பினர்.
இவர்களது மீள் வருகையை ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற பன்முகச்சிந்தனையோடு உண்மையான ஐனநாயக சக்திகள் மட்டும் ஆதரித்து வருகின்ற நிலையில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ரெலோ அமைப்பிற்கு எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் ஒரு பிரதான பாத்திரம் உண்டு. அந்த வரலாற்றை தமது தலைவரை இழந்த நிலையில் அவரது வழித்தோன்றல்கள் தமது கையில் எடுத்து எமது மக்களுக்கான ஐனநாயக வழிமுறைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் ஈவிரக்கமற்ற இந்த படுகொலை திட்டமிட்ட வகையில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.
இது போன்ற மக்கள் விரோத சக்திகளின் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! தனி மனித படுகொலைகளால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டு விட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்!
இந்த படுகொலையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்! அதே வேளையில்தமது உறுப்பினர்களை இழந்து தவிக்கும் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் கனவுகளை வலுப்படுத்தும் ரெலோ அமைப்பினர்களுக்கும், படுகொலை செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்களின் குடும்பத்தவர்கள், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பு உறுப்பினர்களான தோழர் வசந், மற்றும் தோழர் பரா ஆகியோருக்கு நாம் வீர மரியாதை செலுத்துகின்றோம்.!
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி

பூநகரி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது


அண்மையில் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பூநகரிப் பிரதேசத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட இருப்பதாக பாதுகாப்பு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி வருகின்ற மக்கள் தற்காலிகமாக இடைத்தங்கல் முகாம்களில் பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். வெகுவிரைவில் அங்கு சிவில் நிர்வாகமொன்றை நிறுவி மக்கள் தமது இயல்பு வாழ்வை மேற்கொள்ளக்கூடிய சாமனிய நிலை ஒன்றை உருவாக்குவதன் பொருட்டு அரச அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

Monday, November 17, 2008

எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலைநாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் புலம் பெயர் நாட்டில் உள்ள சிறீரெலோ உறுப்பினர்கள்


இன்று 16.11.2008 மாலை வவுனியாவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நிராயுத பாணிகளான எமது கட்சி உறுப்பினர்கள் இராசையா பீரதீப் (வசந்த்) வவுனியா மற்றும் வடிவேல் சிவகுமார் (பரா)வவுனியா ஆகியோர் மீது நடத்திய கோழைத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் கொல்லப்பட்ட எமது தோழர்களுக்கு எமது கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றோம்.அத்துடன் இவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் காயமடைந்துள்ள செல்லையா இளஞ்செலியன் (ரமணன்) மன்னார் மற்றும் செபமாலை றோச் சபிறியல் (நிர்மலன்) மன்னார் ஆகியோருக்கு எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புலத்தில் உள்ள சிறீரெலோ
உறுப்பினர்கள்

எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது.


இன்று வவுனியாவில் எமது உறுப்பினர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6:45 மணியளவில் வவுனியவில் எமது கட்சி உறுப்பினர்கள் ஒரு புதிய காரியாலயம் அமைக்க துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிராயுத பாணிகளான இராசையா பீரதீப் (வசந்த்) வவுனியா மற்றும் வடிவேல் சிவகுமார் (பரா)வவுனியா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். செல்லையா இளஞ்செலியன் (ரமணன்) மன்னார் மற்றும் செபமாலை றோச் சபிறியல் (நிர்மலன்) மன்னார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மிலேச்சத்தனமான இத் துப்பாக்கித் தாக்குதலை சிறி-ரெலோ வன்மையாக கண்டிக்கிறது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட எமது கட்சியை சேர்ந்த வசந்த், பரா இருவரின் மறைவுக்கும் எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம். அத்துடன் இவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, November 16, 2008

பூநகரியிலிருந்து விடுதலைப் புலிகள் தந்திரோபாயப் பின்வாங்கல்


பூநகரியிலிருந்து தந்திரோபாயமாகப் பின்வாங்கியிருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கூறியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அரசாங்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்படும் என அண்மையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயனந்தமூர்த்தி மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் தகவலொன்றைப் பரிமாறியிருந்ததாக ‘சண்டே லீடர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னிக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனையும் சந்தித்திருந்ததாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடிக்க முடியாதெனவும், இறுதியில் ஒருவர் இருக்கும்வரை போராடுவோம் எனவும் வன்னியில் கூறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி ஏனைய கூட்டமைப்பினருக்குக் கூறியதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பிரசாரங்களால் பிழையாக வழிநடத்தப்பட்டிருக்கும் தென்பகுதி மக்கள் எதிர்வரும் சில மாதங்களில் மோதலின் பாதிப்பு என்ன என்பதை உணர்ந்துகொள்வார்கள் என விடுதலைப் புலிகள், வன்னி சென்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டமொன்றைப் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்தால் சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் எனவும், விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருப்பதாக சண்டே லீடர் பத்திரிகை தனக்கு நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி கைப்பற்றப்படும் செய்தியை மாவீரர் தினத்தில் அறிவிக்க அரசு திட்டம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமுள்ள கிளிநொச்சி நகரை புலிகளின் மாவீரர் தினமான நவம்பர் 27 ஆம் திகதி அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“லங்கா டிஸென்ட்’ இணையத்தளம் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியொன்றில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி நகரை இன்னும் சில தினங்களில் கைப்பற்றிவிட முடியும் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தம்மை இனங்காட்ட விரும்பாத சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் “லங்கா டிஸென்ட்’ டுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. தேசிய சுதந்திர முன்னணி கிளிநொச்சி நகரை கைப்பற்றிய படையினரைப் பாராட்டி சுவரொட்டிகளையும் தயாரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒவ்வொரு வருடமும் மாவீரர் வாரத்தையொட்டி நவம்பர் 27 ஆம் திகதி விசேட உரை நிகழ்த்துவது வழக்கமாகும். கடந்த வருட மாவீரர் தின உரையின் பின்னர், 2008 ஆம் ஆண்டு புலிகளின் தலைவர் மாவீரர் தின உரையாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை அமெரிக்க மாநாட்டில் மன்மோகன் சிங் பேச்சு


சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை என்று அமெரிக்க மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகள் பற்றி விவாதிக்க அமெரிக்க அதிபர் புஷ், 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை வாஷிங்டன் நகரில் நேற்று கூட்டி இருந்தார்.
இதில் புஷ், பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ரஷிய அதிபர் மெட்வதேவ், பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஜப்பான் பிரதமர் டாரோ அசோ மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் கூறியதாவது:-
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
நிதி நெருக்கடி பிரச்சினையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. கடனுதவி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு பங்கு சந்தைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்த 9 சதவீத வளர்ச்சி இந்த நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் வரும் ஆண்டுகளில் இந்தியா வலுவான வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளிடையே ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை. இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் பிரச்சினையை சமாளிக்க முடியும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் அங்கு கூறினார்.

நிலங்களைக் கைப்பற்றுவது மாத்திரம் முழுமையான வெற்றியல்ல: ஐக்கிய தேசியக் கட்சி


நிலங்களைக் கைப்பற்றுவது மாத்திரம் யுத்தத்தின் முழுமையான வெற்றியெனக் கூறமுயாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நிலங்களைக் கைப்பற்றுவதுடன் நிலையான சமாதானத்துக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவேண்டுமெனவும் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
“அண்மையில் நடைபெற்று முடிந்த சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரங்களில், கிளிநொச்சியைக் கைப்பற்றப்போவதாகவே கூறிவந்தது. தற்பொழுது அதனை மாற்றி பூநகரியைக் கைப்பற்றியுள்ளது” என அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இராணுவத்தினரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசாங்கம் தலையிடக்கூடாது என வலியுறுத்தியிருக்கும் அவர், அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கம், இராணுவத்தின் நிகழ்ச்சி நிரல்களில் தலையிட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பூநகரியை வெற்றிபெற்ற இராணுவத்தினரைப் பாராட்டுவதுடன், அவர்களுக்குத் தாம் கௌரவம் அளிப்பதாகவும், இராணுவ வெற்றிகளை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அரசாங்கம் நிலங்களைக் கைப்பற்றுவதுடன் அரசியல் தீர்வொன்றையும் முன்வைக்க வேண்டியது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Tuesday, November 11, 2008

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் 3 கப்பல்கள் 13 ஆம் திகதி புறப்படுகின்றன


வன்னி யுத்தத்தினால் பாதிக்கபட்டுள்ள வட பகுதி மக்களுக்கான தமிழக அரசினது நிவாரணப் பொருட்களை ஏற்றிய மூன்று கப்பல்கள் நாளை மறுதினம் சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்படுகின்றன. இந்தக் கப்பல்களில் 100 கெண்டய்னர்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.வியாழக்கிழமை சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்படும் இந்த மூன்று கப்பல்களும் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்புத்துறை முகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பை வந்தடைந்தவுடன் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக வடபகுதிக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி இடம்பெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது,

பாலாவி பிரதேசமும் படையினர் வசம்


இலங்கை இராணுவத்தின் முதலாவது அதிரடிப் படைப் பிரிவினர் இன்று காலை பாலாவி பிரதேசத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நியைம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே இன்று காலை இந்தப் பிரதேசத்தில் பலத்த மோதல்கள் இடம் பெற்றதாகவும் அதன் பின்னரே பாலாவி பகுதி படையினரிடம் வீழ்ச்சியடைந்ததாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.ஏ32 வீதியின் மேற்காக பலாலாவி அமைந்துள்ளது.

ஒரு பௌத்தனாகச் சொல்கிறேன் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல- மங்கள சமரவீர


இலங்கை பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு இல்லையென சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.
இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரமான நாடு, முஸ்லிம்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்ற இனவாதக் கோசத்துடன் அரசாங்கம் ஆட்சி நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டிய மங்கள சமரவீர, இது இனவாதத்தைத் தூண்டுவதுடன், முஸ்லிம்களும் தனியான அலகொன்றைக் கோருவதற்கே வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
“ஒரு பௌத்தராகக் கூறுகின்றேன் இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல. அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது” என மங்கள சமரவீர கூறினார்.
முஸ்லிம்கள் வாணிபம் செய்வதற்காகவே இலங்கை வந்தவர்கள் எனவும், தமிழர்கள் வந்தேறு குடிகள் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்துத் தெரிவித்ததாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை மருதானையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
அத்துடன், தற்பொழுது நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் யுத்தமானது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கோ அல்லது மஹிந்த சகோதரர்களுக்கோ தேவையற்றது எனத் தெரிவித்த மங்கள சமரவீர, பிரபாகரன் தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு படிக்கவைத்துக்கொண்டு அப்பாவிப் பிள்ளைகளை வைத்து யுத்தத்தை நடத்தி வருவதாகவும், அதேபோல, மஹிந்த சகோதரர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்கவைத்துக்கொண்டு தென்பகுதி அப்பாவி இளைஞர்களைக் கொண்டு யுத்தத்தை நடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
“தற்பொழுது வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தத்தில உயிரிழப்பவர்களின் சடலங்களை அரசாங்கம் பெற்றோரிடம் கூடக் கையளிப்பதில்லை. காணாமல்போய்விட்டதாகக் கூறிவிடுகிறது. சொந்தப் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைக் கூடச் செய்யமுடியாத நிலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களை நோயாளர் காவு வண்டிகளில் அழைத்துவந்தால் காயமடைந்தவர்களின் உண்மைவிபரம் தெரிந்துவிடும் என்பதற்காக காயமடைந்த படையினர் பேரூந்துகளில் அழைத்து வருப்படுகின்றனர். இதனால் கால தாமதம் ஏற்படுகிறது” என மங்கள சமரவீர கூறினார்.
இதேவேளை, கிராமிய மட்டங்களிலும், முச்சக்கரவண்டிச் சாரதிகளையும் கொண்டு புலனாய்வுப் பிரிவொன்றை அமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக சமரவீர பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டினார்.
இவ்வாறானதொரு முறையே சீனாவில் கடைப்பிடிக்கப்படுவதால் அதனைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் சீனா சென்று திரும்பியிருந்ததாகவும், இந்த நடவடிக்கை ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

படையினர் முல்லைத்தீவு குமுளமுனைக் கிராமத்தை அண்மித்துள்ளனர்


முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 59 வது படைப்பிரிவினர் குமுளமுனைக் கிராமத்தின் ஒரு பகுதியை இன்று பிற்பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
படையினர் இவ் நகரை அண்மித்தது வன்னியை விடுவிக்கும் படை நடவடிக்கையின் இன்னொரு மைல்கல்லாகும்.
போரியல் யுக்திகளுக்கு மிக அத்தியாவசியமான குமுளமுனை பிரதேசத்தைக் கைப்பற்றுவது படையினரின் குறிக்கோளாகும். இதைத் தற்பொழுது அண்மித்தனால் புலிகளை மேலும் சிக்கலுக்குள் ஆக்கியுள்ளது.
தற்பொழுது படையினர் மூன்றுமுறிப்புக்கும் குமுளமுனைப் பாதைக்கும் இடைப்பட்ட பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர்.
இக்கிராமம் புலிகளின் இதயமாகக் கருதும் முல்லைத்தீவுக்கு 13 கி.மீ தெற்காக அமைந்துள்ளது.

Sunday, October 26, 2008

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது வரையில் காத்திருக்காமல் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் -ரொபட் ஓ பிளேக்


இலங்கையில் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது வரையில் காத்திருக்காமல் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிவரும் “தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்த பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை”என்ற கருத்தை நிராகரித்தார்.
இராணுவ வெற்றி என்பது மிகமிக கடினமான ஒன்றாகும். எனக் குறிப்பிட்ட அவர் வடக்கை இராணுவத்தினர் முழுமைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலிகளாவது, தமது போராட்டத்தை முன்கொண்டு செல்வர் என இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தை ரொபட் ஓ பிளேக் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையின் அனைத்துக் கட்சி மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வுக்கான சுமார் 90 வீத யோசனைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிளக் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் எதிர்கட்சிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னியில் சுமார் இரண்டு இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளார்கள். இது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கும் கசப்பான எதிர்காலத்தை உருவாக்கும் என அவர் எதிர்வு கூறியுள்ளார். இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியும் என்றும் ரொபட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி போராட்டங்கள் நடத்த ஏற்பாடு


ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர் போராட்டங்களையும் பேரணிகளையும் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜே.வி.பிமற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள கிராமங்களில் வீடுவீடாக சென்று விளக்கமளித்து வரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களினால் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு ஆபத்து என்று கூறிவருவதுடன் அதற்கு எதிராக சிங்கள மக்கள எழுச்சியடைய வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிவேறுபாடுகள் இன்றி சகலரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கு தயாராக வேண்டும் எனவும் இல்லையேல் புலிகள் தமிழீழத்தை பெற்றுவிடுவார்கள் என்றும் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.
புத்த பிக்குமாரை கொண்ட ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் பொளத்த ஆலயங்களில் பிரசாரங்களை மேற்கொண்ட வருகின்றனர்.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படையினர் பெற்று வரும் வெற்றிகளை இல்லாமல் செய்வதற்கே தமிழ் நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஜாதிக ஹெல உறுமய பிக்குமார் தெரிவிக்கின்றனர்.

வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் வேண்டுகோள்


ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் ஐ.நா. சபையில் நடந்த கிழக்கு-மேற்கு நாடுகள் அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வல்லரசு நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல் அணு ஆயுதங்களைக் அழிக்கவேண்டியதன் அவசியம் குறித்து அவர் வற்புறுத்தினார்.
பெரும்பாலான நாடுகள் அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவைத் தரும் ஆயுதங்களை பெரும் எண்ணிக்கையில் வைத்திருக்கின்றன. சில நாடுகள் தங்களின் சுய அந்தஸ்துக்காக அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் தாங்கள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களை அழித்து விடவேண்டும்.
ஏனென்றால் இந்த ஆயுதங்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். இவற்றை பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும். இவை சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னரே அரசியல் தீர்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்


கிளிநொச்சி நகரை அரசாங்கப் படைகள் விடுவித்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசி;ங்காவுடன் வெள்ளியன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெளிவுபடுத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கா இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தபோதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு பதிலளித்திருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாச் சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சாதகமான தீர்வுக்கு தமது ஆதரவு இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, எவ்வாறாயினும், கிளிநொச்சி நகரை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பின்னரே இதுபற்றித் தாம் ஆராயப்படும் என்று கூறியிருப்பதாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.

Saturday, October 25, 2008

ராமேஸ்வரம் கோர்ட்டில் சீமான், அமீர் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்


இயக்குநர் சீமான் மற்றும் அமீர் இன்று ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ராமேஸ்வரம் போராட்டத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இருவரும் நேற்று இரவு கியூ பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இன்று இருவரையும் விமானம் அல்லது கார் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரையும் ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கவுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் பற்றிய கணிப்பீடு நாளை


வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் பற்றிய கணக்கெடுப்பொன்றினை மேற்கொள்ளத் தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு நளை காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறும். சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவனங்களுடன் வருகை தந்து தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி முன்னரங்கப் பகுதியில் கடும் மோதல்கள்


கிளிநொச்சி யுத்தகளத்தில் கடந்த 48 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57வது படைப்பிரிவு முன்நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு, மணியங்குளம் மற்றும் பல்லவராயன்கட்டு ஆகிய பகுதிகளில் 57வது படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடன் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டதாகவும், கிளிநொச்சி தெற்கு பணிக்கன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
572வது பிரிகேடியர் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் அக்கராயன் குளம் வடக்குப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டளவு தாக்குதலில் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏ௩2 வீதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது 583வது படைப் பிரிவினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், பல்லவராயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, வன்னி மோதல்களில் இராணுவத்தினருக்கு ஏற்படும் உண்மையான இழப்புக்கள் குறித்து கொழும்பு சரியான தகவல்களை வெளியிடுவதில்லையென விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினர் முன்னேறுவதற்கு எடுத்த முயற்சிகளை விடுதலைப் புலிகள் முறியடித்திருப்பதாகத் தெரிவிக்கும் அந்த இணையத்தளம், இந்த முறியடிப்புத் தாக்குதல்களில் பாதுகாப்புத் தரப்பிற்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுஇவ்விதமிருக்க, தற்பொழுது வன்னியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இராணுவ நடவடிக்கைகள் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக முதலில் அறிவித்த நாடு அமெரிக்கா.


இலங்கை தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார். சென்னை பல்கலைக் கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கலந்துகொண்டு `இலங்கை பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ராணுவ நடவடிக்கைகள் மூலமோ, சட்ட நடவடிக்கைகள் மூலமோ மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வுக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் இதைச் சொல்கிறோம்.
இலங்கை அரசு, தனது சட்ட திட்டங்களுக்குஉட்பட்டு, சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன. அதற்கு வசதியாக புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுவின் பணிகளை செயல்படுத்த இலங்கை அரசு முன் வர வேண்டும்.
சிங்கள மக்களில் ஒருசாரார் முதலில் விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டு, அதன்பின்னர் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்து.
இலங்கை தமிழர்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு இரையாகாதவாறு வேலைவாய்ப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
போரினால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய ஐ.நா. அமைப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக முதலில் அறிவித்த நாடு அமெரிக்காதான்.
இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் ஆகிய முத்தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது சாத்தியம்தான். தற்போது இதற்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் இலங்கை சொர்க்க பூமியாக மாறும். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டால் இலங்கையின் நிலையே மாறிவிடும். இவ்வாறு அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார்.
முன்னதாக, அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரெட்ரிக் கெப்லான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பல்கலைக்கழக பாதுகாப்பு கல்வித்துறைத் தலைவர் மால்வியா நன்றி கூறினார்.

Friday, October 24, 2008

அரசியல் தீர்வை முன்வைக்குமாறு இந்தியா அழுத்தம்கொடுக்கவில்லை: முன்னாள் உயர்ஸ்தானிகர்


இந்திய மத்திய அரசாங்கம் என்னதான் அழுத்தங்களை எதிர்நோக்கினாலும் இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கவேண்டுமென எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையென இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு நட்புரீதியான ஆலோசனைகளையே’ வழங்கியுள்ளது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் என்.என்.ஜா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.இலங்கைக்கு, இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இன்ன தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினை தோன்றினாலும் அதனைத் தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஷ்பரம் புரிந்துணர்வு உள்ளது” என ஜா தெரிவித்தார்.
தேர்தல் நெருக்கியுள்ள நிலையில் தமிழகத்திலுள்ள கட்சிகள் புதுடில்லிக்கு இலங்கை விடயத்தில் அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கம் சில முன்மொழிவுகளை முன்வைத்திருப்பதாகவும் கூறினார். அதேநேரம், உள்விவகாரத்தில் தலையிடாமல் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தினால் அது பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மனிதநேயப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்காத எந்த விதமான இராணுவ நடவடிக்கைகக்கும் இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் ஜா மேலும் கூறினார்.

தடையை நீக்குமாறு விடுதலைப் புலிகள் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்


தமது அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் எனவும், பழையவற்றை மறந்து தமது போராட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்குமாறும் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுவரும் இராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுவரைவில் இலங்கை இராணுவத்தின் மீது வலிந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இழக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் வெகுவிரைவில் மீட்கப்படும் எனவும் பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள விசேட செவ்வியில் நடேசன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் கஜபாபுர பகுதியினை கைப்பற்றியுள்ளனர்


பாதுகாப்பு படையினர் வெலி ஒயவில் அமைந்துள்ள கஜபாபுர பகுதியினை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பகுதியில் பல பாதுகாப்பு அரண்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்ட்டுள்ளது.
படையினரின் இந்த நடவடிக்கைளின் போது புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்குப் பணியாளர்கள் அனுமதி


காங்கேசன்துறை மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் பொருள்களை ஏற்றி இறக்கும் பணிகளுக்காக பணியாளர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துகின்ற நிமல்லவ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததுடன், மற்றுமொரு சரக்குக் கப்பலான றுகுணு கப்பல் சேதமடைந்திருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காங்கேசன்துறை மற்றும் மயிலிட்டி துறைமுகங்களில் பொருள்களை ஏற்றியிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தெல்லிப்பழை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை இரண்டு துறைமுகங்களுக்குமான பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கப்பல்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஈ.பி.டி.பி.யின் அழைப்பின் பேரில் நேற்று வியாழக்கிழமை யாழ் குடாநாட்டில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை குடாநாட்டின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, October 22, 2008

இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்தித் தருமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



சோவியத் யூனியனிடமிருந்துகொள்வனவு செய்யப்பட்ட இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்தித் தருமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


“சோவியத் யூனியனாக இருந்தபோது கொள்வனவு செய்யப்பட்ட இராணுவத் தளபாடங்கள் பழுதடைந்துள்ளன. சோவியத் நாடுகள் தனியாகப் பிரிந்திருப்பதால் இராணுவத் தளபாடங்களைத் திருத்திக் கொள்வதில் சிக்கல் தோன்றியுள்ளன. எனினும், இந்த இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்திக் கொடுக்கும்” என அவர் கூறினார்.
இராணுவ புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது இதுவரை ரஷ்யாவுடன் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கோதபாய, “பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் இராணுவ விடயங்களை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான அவசியம் பற்றிய விளிப்புணர்வொன்றை ஏற்படுத்தவேண்டும்” என்று கோதபாய குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்பொழுது வன்னிப் பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

காங்கேசன்துறையில் சரக்குக் கப்பல்கள் மீது தற்கொலைத் தாக்குதல்



யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற இரு சரக்குக் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற றுகுணு மற்றும் நிமல்லவ ஆகிய இரு கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதை விடுதலைப் புலிகள் மறுப்பதாக பாதுகாப்புத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் மூன்று படகுகள் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்குச் சென்றிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.
கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய கடற்படைச் சிப்பாய் குறிப்பிட்ட விடுதலைப் புலிகளின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், ஒரு படகு நிமல்லவ கப்பல் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் வெடித்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நிமல்லவ கப்பலுக்கு கணிசமானளவு சேதம் ஏற்பட்டிருப்பதாக டி.கே.பி.தசநாயக்க தெரிவில்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா ஒருபோதும் உதவி வழங்காது இந்தியப் பிரதமர் மன்மோகன்



விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா ஒருபோதும் உதவி வழங்காது என ஜப்பான் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சென்ற உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய அமைப்பு எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அதிகாரி, அவ்வாறானதொரு அமைப்புக்கு ஒருபோதும் இந்தியா உதவிசெய்யாது எனத் தெரிவித்துள்ளார்.
வன்னிக்கு உணவு
வன்னியில் நடைபெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள்களை அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஏற்கனவே ஒருதொகுதி உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொருள் தொகுதிகள் வன்னிப் பகுதியைச் சென்றடைந்திருப்பதுடன், அந்த உணவுப் பொருள்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய இந்தியா முயற்சிப்பதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தற்பொழுது இலங்;கையில் நிலவும் சூழ்நிலையில் மனிதநேயப் பிரச்சினைகள் காணப்படுவதாகவே இந்தியா பார்க்கிறது எனவும், நீண்டகாலமாக இலங்கையில் தொடரும் முரண்பாடுகள் அரசியல் தீPர்வொன்றின் மூலமே தீர்த்துவைக்கப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடு எனவும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

Monday, October 20, 2008

புதிய அமைப்பு தொடங்குகிறார் தயாநிதி மாறன்


முரசொலி மாறன் பேரவை’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தயாநிதி மாறன் இன்று துவக்குகிறார்.
மு.க.அழகிரிக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய மாறன் சகோதரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், சமீப காலமாக திமுக அரசுக்கு எதிராக செய்திகளை சன் டி.வி.அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருவதுடன்,எதிர்கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அத்துடன் விஜயகாந்த், சரத்குமார், வைகோ, ராமதாஸ், இடதுசாரி கட்சி தலைவர்களின் செய்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
இந்நிலையில், தனது தந்தை முரசொலி மாறன் நினைவாக ‘முரசொலி மாறன் பேரவை’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தயாநிதி மாறன் இன்று மாலை துவக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மாறன் அறக்கட்டளை, சன் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளைகளை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் மாறன் சகோதரர்கள் அரசியல் ரீதியாக களத்தில் இறங்கும் வகையில் முரசொலிமாறன் என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை துவக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்னோடியாகவே தயாநிதி மாறன் இதனை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சந்த்ராயன்-1 விண்கலத்தை நிலவுக்கு ஏவுகிறது இந்தியா


இந்தியாவின் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து எதிர்வரும் புதன்கிழமை ‘சந்த்ராயன்-1’ விண்கலம் நிலவுக்கு ஏவப்படவுள்ளது. இதற்கான விநாடிகளை எண்ணும் நடவடிக்கை (கவுண்ட்-டவுன்) இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1,380 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி-சி 11 ரொக்கட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.
வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏதும் ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி புதன்கிழமை பி.எஸ்.எல்.வி. ரொக்கட் விண்ணுக்குச் செலுத்தப்படும். பூமியிலிருந்து 250 கி.மீ தூரத்தை அடைந்தவுடன் சந்த்ராயன் விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சந்த்ராயன் விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கி அதை பூமிலிருந்து மேலும் தூரத்துக்குத் தள்ளுவதற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ரொக்கெட்டுகள் இயங்க இயங்க ஒரு கட்டத்தில் இந்த விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 37,000 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் 73,000 கி.மீயாகவும் அதிகரிக்கும்.
மேலும் ராக்கெட்டுகளை இயக்கி இயக்கி இதன் சுற்றுப்பாதை பூமியிலிருந்து 3,87,000 கி.மீயாக உயர்த்தப்படும். இவையெல்லாம் 11 நாட்களில் நடந்து முடியும். இந்த 3,87,000 கி.மீ. உயரத்தை அடைந்தபின் சந்த்ராயன் விண்கலம் பூமியை ஒரு முழு சுற்று சுற்றி முடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் சந்த்ராயன் விண்கலத்திலிருந்து ஒரு துணை விண்கலம் நிலவுக்குள் இறங்கி, நிலவின் வளி மண்டலத்தையும் தரையிறங்கிய பின் அதன் மண்ணையும் இந்த விண்கலம் ஆய்வு செய்து சந்த்ராயன் விண்கலத்துக்கு தகவல் தரும், அந்தத் தகவலை சந்த்ராயன் வாங்கி பூமிக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகள் சுமார் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
இந்திய-அமெரிக்க அணுவாயுத ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் விண்கலத்தை ஏவும் இந்தியாவின் இந்த முயற்சி முக்கிய இடம்பிடித்திருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பராக் ஒபாமாவுக்கு முன்னாள் இராஜாங்கச் செயலாளர் பவல் ஆதரவு


அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய செனெட்டரென பராக் ஒபாமாவை கொலின் பவல் வருணித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் மற்றும் பராக் ஒபாமா ஆகிய இருவருக்கும் நாட்டை ஆட்சி செய்கின்ற தகுதியிருந்தபோதிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சிறந்த முறையில் கையாளக்கூடிய திறமை பராக் ஒபாமாவுக்கே அதிகமாக உள்ளதெனவும் கொலின் பவல் குறிப்பிட்டார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் ஆக்கபூர்வமானதாக இல்லையெனக் கூறி தனது கட்சியை கொலின் பவல் விமர்சித்துள்ளார்.

எனினும், ஜோன் மக்கெய்னால் தெரிவுசெய்யப்பட்ட குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலின் இன்னமும் ஜனாதிபதிப் பதவிக்குத் தயாராகவில்லை என்பது தனது அபிப்பிராயமெனவும் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி சென்னி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்வெல்ட்க்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரன்பாடு காரணமாக 4 வருட காலமாக வகித்து வந்த தனது பதவியிலிருந்து கொலின் பவர் ஓய்வுபெற்றார்.

தற்கொலைக் குண்டுதாரியின் 'சிம் காட்' உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் கைது


அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியின் சிம் அட்டையின் உரிமையாளர் யாழ் குடாநாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைக் குண்டுதாரி பயன்படுத்திய கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளரான புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தியாகராஜா சுதாகரன் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவரைப் பொலிஸார் யாழ் நீதிமன்றத்தில் நிறுத்தியதுடன், எதிர்வரும் 30ஆம் திகதிவரை பொலிஸ் கட்டுப்பாட்டில் விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் தாயார் நேற்றையதினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுதாரி தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Thursday, October 2, 2008

நிதி மோசடியில் ஈடுப்பட்ட சக்விதி ரணசிங்க நிதி நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்த 18 பொலிஸார் அந்நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு

நிதி மோசடியில் ஈடுபட்ட சக்விதி ரணசிங்க நிதி நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்த ஒரு பொலிஸ் அத்தியட்சர் உட்பட 18 பொலிஸார் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இந் நிறுவனத்தில் ஒருவர் ஆக கூடிய வைப்பு பணமாக ஒரு பொலிஸ் அதிகாரி 3 மில்லியன் ரூபாவினை வைப்புச்செய்துள்ளார்

Wednesday, October 1, 2008

வவுனியா தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் தனியார் கல்வி நிறுவனகா.பொ.த உயர்தர மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

வவுனியா தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் தனியார் கல்வி நிறுவன கா.பொ.த உயர்தரம் மாணவனாம். அடையாள அட்டையொன்றின் மூலம் கண்டு பிடிப்பு வவுனியா நகரப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை க.பொ.த.உயர்தர வகுப்பில் கல்வி கற்ற இளைஞன் ஒருவரே நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தனியார் பஸ் நிலையச் சந்தியில் பொலிசார் ஏறியிருந்த முச்சக்கர வண்டிமீது, சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் மோதி தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக இந்தச் சம்பவம் பற்றி தகவல் வெளியிட்டிருந்த பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. சம்பவ இடத்தில் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்ட தற்கொலைக் கொலையாளியின் உடைமையில் இருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம், அவர் வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்தவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பதும், பொதுமக்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன

கிளிநொச்சிப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிர்வாக முகாம் மீது 3 விமானத்தாக்குதல்கள்

இலங்கை விமானப்படையினரின் சுப்பர் சோனிக் விமானங்கள் கிளிநொச்சிப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிர்வாக அலுவக முகாமொன்றின் மீது பிற்பகல் 2.30 மணியளவில் 3 விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது..இத்தாக்குதல் வெற்றியளைத்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

கிளிநொச்சிப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிர்வாக முகாம் மீது 3 விமானத்தாக்குதல்கள்

இலங்கை விமானப்படையினரின் சுப்பர் சோனிக் விமானங்கள் கிளிநொச்சிப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிர்வாக அலுவக முகாமொன்றின் மீது பிற்பகல் 2.30 மணியளவில் 3 விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது..இத்தாக்குதல் வெற்றியளைத்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

Saturday, September 27, 2008

தாக்குதல்கள் நகரை நெருங்குகின்றன்; கிளிநொச்சி வெறிச்சோடுகிறது


வன்னியில் கிளிநொச்சி நகருக்கு அருகில் மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், வான் குண்டுத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும், சிறிய ஆயுதத் தாக்குதல்களும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாக சர்வதேச உதவி அமைப்புக்களுக்கிடையிலான முகவர் குழுவான ஐ.ஏ.எஸ்.சி. தெரிவித்துள்ளது

இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடும் உரிமை இணைத்தலைமை நாடுகளுக்கு கிடையாது-அரசாங்கம் இதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்கிறது ஜே.வி.பி

இணைத் தலைமை நாடுகளுக்கு இனிமேலும் இலங்கை பிரச்சினையில் தலையிடும் உரிமை கிடையாது. இதனை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிப்பதோடு அந்நாடுகளுடன் தேசிய பிரச்சினை தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடலாகாது. தமிழ் மக்களை இரண்டாம் தரப்புப் பிரஜைகளாகக் கூறுவது அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் கருத்தாகும் என்று ஜே.வி.பி. தெரிவிக்கின்றது.இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை என்று ரத்தானதோ அன்றே இணைத் தலைமை நாடுகளின் செயற்பாடும் ரத்தாகிவிட்டது. இதற்கு மேலும் எமது பிரச்சினையில் தலையிடும் உரிமை அந்நாடுகளுக்கு கிடையாது. ஆனால் இதனை அரசாங்கம் தெரிவிப்பதில்லை. மாறாக புலிகளுக்கு சார்பான நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய நாட்டு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கை குலுக்கி மகிழ்கிறார்.அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேவேளை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் கைங்கரியத்திலும் இறங்கியுள்ளது. எதுவிதமான தெளிவான உறுதியான கொள்கை இல்லை.விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இணைத் தலைமை நாடுகள் விரும்பவில்லை. எனவே எவ்வாறாவது யுத்தத்தை நிறுத்தச் செய்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கச் செய்வதே அவர்களது நோக்கமாகும். தமிழ் மக்களுக்கு தீர்வினை கொடுக்க வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய வேண்டும். இதற்கு எதிராகவே மேற்கு நாடுகள் செயற்படுகின்றன. சர்வதேச தலையீடுகளுக்கான வாய்ப்புக்களை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கின்றது. யுத்தத்தால் இடம்பெயரும் தமிழ் மக்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்களை வழங்கி அவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள தவறிவிட்டது.தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் தவறியுள்ளது. எனவே அம்மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமான நாடென்றும் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளென்ற கருத்துக்களும் அரச தரப்பினால் வெளியிடப்படுகின்றது.இவ்வாறான சூழ்நிலைகள் எமது நாட்டு பிரச்சினையில் ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகள் தலையிடும் நிலைமையை உருவாக்குகின்றது. அரசாங்கத்திடம் தெளிவான உறுதியான கொள்கை இல்லை. நாட்டுக்குள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. 17 திருத்தச் சட்டத்தை முன்னெடுத்து சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடருமானால் எமது நாட்டு பிரச்சினையில் வெளிநாடுகளின் தலையீடுகள் தவிர்க்க முடியாததாகிவிடும்

ஏ-9 வீதியுடாக கிளிநொச்சியை நெருங்கும் படையினர்: பாதுகாப்பு அமைச்சு



மேற்கு ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் வடக்குப் பகுதிகளை அரசாங்கப் படைகள் நெருங்கி வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

57வது படையணி கொக்காவிலை நெருங்கியிருப்பதுடன், அதிரடிப்படை-2 மாங்குளத்தை அண்மித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, அக்கராயன் குளத்திற்கு மேற்கே நேற்றுமுன்தினம் புதன்கிழமை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது மேற்கொண்;ட தாக்குதலில் இரண்டு பதுங்கு குழிகள் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிரடிப்படை-1 நாச்சிகுடா பகுதியில் கடந்த புதன்கிழமை முன்நகர்வு முயற்சியில் ஈடுபடும் படையினர் அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 3 போராளிகள் காயமடைந்துள்ளனர்.

வன்னேரிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 4 விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படும் அதேவேளை,விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் அமைந்துள்ள இடத்தை படையினர் தாக்குதல் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் ஒலிபரப்பு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் உயரிழந்ததாகவும்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
வானொலி தொடர்பாடல் உபகரணங்கள் ரி-56 றிபிள் மற்றும் 300 குண்டுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சு, கடந்த புதன்கிழமை வவுனியாவிற்கு வடமேற்கே பாலமோட்டைப் பகுதியில் அதிரடிப்படை-2க்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 6 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாகவும், அங்கு ரி-56 ஆயுதத்துடன் 65 துப்பாக்கி ரவைகள், 3 குண்டுகள் மற்றும் 3 கைக்குண்டுகள் ஆகியனவற்றை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, ஓமந்தை வீதிக்கு அண்மையாகவுள்ள நாவற்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்குழிகள் அமைந்துள்ள பகுதிகளில் 56வது படையணியினர் கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகளுடன் மோதியதாகவும், இதன்போது பகுங்குழியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததாகவும் படையினர் உறுதிப்படுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
முல்லைத்தீவு ஆண்டான்குளம் காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன், 59வது படையணியினர் சண்டையில் ஈடுபட்டதாகவும், இதன்போது 5 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்ததாகவும் படையினர் கூறிய அதேவேளை, படைத்தரப்பில் 17 பேர் உயரிழந்தும், காயமடைந்துள்ளததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான எமது படை நடவடிக்கை வெற்றியின் விளிம்பில் -பாதுக்காப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ


பயங்கரவாதத்திற்கு எதிரான எமது படை நடவடிக்கையில் எமது படைகள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.தரையில் சகல போர்முனைகளிலும் கடல் மற்றும் வான் வழிகளிலும் தாம் மிகுந்த தேர்ச்சியுடன் உள்ளோம்.தற்போதைய போரில் எமது படைகள் நிச்சயம் வெற்றியடையும் என்ற பூரண நம்பிக்கை எமக்குள்ளது. அந்த வெற்றியை விரைவாக நாம் பெற்றுவிடுவோம். என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபஷ இலண்டன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் வெடிபொருட்கள் மீட்பு


நீர் கொழும்பு பகுதியில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது C-4 ரக வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி போன்றன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை நீர் கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

அரியாலை கிழக்கு பகுதி மீது விடுதலைப்புலிகள் ஷெல் தாக்குதல்-படைவீரர் பலி; மற்றொருவர் காயம்


யாழ்ப்பாணம், அரியாலை கிழக்குப் பகுதி மீது விடுதலைப் புலிகள் நேற்று மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். அரியாலை கிழக்கு பகுதியை நோக்கி விடுதலைப் புலிகள் நேற்று காலை 10.30 மணியளவில் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இரண்டு படையினர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஞானதிலக (வயது 23) என்பவர் உயிரிழந்ததுடன் சந்திரசேகர (வயது 34) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

Thursday, September 4, 2008

மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் பயங்கரவாத நோக்கத்திற்கு இடமில்லை - பிரதமர் ரட்ணசிறி


தாய்நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளின் செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மக்களை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை பயங்கரவாதிகள் மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். பயங்கரவாதிகளின் அந்த நோக்கத்திற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான மறைந்த ஏ.யூ. ஜயவர்த்தனவினால் நாட்டின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் வங்கியின் பயிற்சி மத்திய ஸ்தானத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான ஆலோசனைகளை இந்த கட்டுரைகளிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
கிராம பிரதேசத்திலிருந்து அரச சேவைக்குள் நுழைந்த அவர், பொருளாதாரத்தை கிராம மட்டத்திலிருந்து எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நாடு பொருளாதார ரீதியில் பின்னடைந்த நிலையில் இந்த ஆலோசனைகள் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் பயங்கரவாதிகள் பொதுமக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

இதயவீணையின் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி


எம் இனிய மக்களுக்கும்இதயவீணை வானொலியின் அமைப்பாளர்கள்மற்றும் கலைஞர்களுக்கும்புலம் பெயர்ந்து வாழும்எம் தாயக தேசத்து உறவுகளுக்கும் வணக்கம்!
எமது மக்களின் உரிமைக்குரலாகவும், எமது தேசத்தின் உண்மையாகவும், மக்களின் மனச்சாட்சியாகவும் ஒலித்து வருகின்ற இதயவீணை வானொலி நான்கு அகவைகளை கடந்து விட்ட சரித்திர சாதனையோடு இன்று ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கின்றது.
இந்த சரித்திர நிகழ்வானது மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும் இந்த சாதனை மகிழ்ச்சியைதுயரங்கள் நிறைந்த இந்த சூழலில் கொண்டாடி மகிழ்வதற்கு எமது மனங்கள் மறுக்கின்றன.
கடந்து போன ஆண்டுகளிலிலும் ஒவ்வொரு அகவைகளையும் இதயவீணை வானொலி கொண்டாடி மகிழ்ந்திருந்த போது எனது வாழ்த்துக்களையும் உற்சாக வரவேற்பையும் நான் தெரிவித்திருந்தேன்.
இந்த வானொலி ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கும் இன்றைய சூழலிலும்எமது மக்கள் துயரங்களையும், அவலங்களையும் சுமந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனாலும் துயரங்களில் இருந்து விடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை ஒளி தெரிகின்றது.
இருண்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை பரந்த வெளிச்சத்தை நோக்கி அழைத்து செல்வதே இந்த வானொலியின் இலக்காக இருந்து வருவதால்இன்றைய நாளில் சில கருத்துக்களை நான் உங்களிடம் மனம் திறந்து சொல்ல விரும்புகின்றேன்.
எமது மக்களின் எதிர்கால விடிவிற்கு ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. இருண்டு கிடக்கும் எமது மக்களின் வாழ்விடங்களில் நம்பிக்கை தரும் வெளிச்சங்களை கொண்டு வருவதற்கு ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
அவலப்படுகின்ற எமது மக்களின் வாழ்வில் மேலும் சுமைகளை சுமத்தும் வன்முறைகளுக்குதூபமிடும் சக்திகளுக்கு துணை போகாமல், எமது மக்களின் சுமைகளை இறக்கி வைப்பதற்கே ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
எமது மக்களுக்கு வழிகாட்டிகளாக நின்று ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை நோக்கி ஊடகங்கள் வழி நடத்தி செல்ல வேண்டும். உண்மையின் பக்கம் நின்று குரல் எழுப்ப வேண்டும்.
அந்த வகையில் இதயவீணை வானொலி என்பது மக்களின் பக்கம் நின்று, உண்மையின் பக்கம் நின்று எமது மக்களை எதிர்கால விடியலை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
சமாதானத்திற்கான பயணம் என்பது நீண்ட நெடியது. அதன் பாதைகளில் சமாதானத்தின் எதிரிகள் தடைகளை உருவாக்கி விட்டு காத்திருப்பார்கள்.
மக்களின் நண்பர்களை, சமாதானத்தை நேசிப்பவர்களை, அமைதியை விரும்புபவர்களை, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக உழைப்பவர்களை, மக்களின் அன்றாட அவலங்களுக்கு தீர்வு காண்பவர்களை, ஐனநாயக சத்திகளை, மனித உரிமைவாதிகளை, உண்மையை உள்ளபடி உரைக்கும் கல்விமான்களை, ஊடகவியலாளர்களை கொன்று வெறி தீர்ப்பதே சமாதானத்தின் எதிரிகளின் கொடிய வன்முறையாக இருந்து வருகின்றது. இவைகளே அவர்கள் போடுகின்ற தடைகளாக இருந்து வருகின்றன.
கொல்வதும், கொல்லக்கொடுப்பதும், அதற்கான சூழ்நிலைகளை தோற்றுவிப்பதுமே எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்வியல் உரிமைக்கு தடையாக இருப்பவர்களின் நோக்கமாக இருந்து வருகின்றது. இவைகள் யாவும் விடுதலையின் பெயரால் எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு படுகுழி தோண்டும் கொடிய நிகழ்வுகளாகவே நீடித்து வருகின்றன.
இந்த உண்மைகளை உறுதியுடன் நின்று உரைப்பதற்கு பல்வேறு ஊடகங்களும் தயக்கம் காட்டி வருகின்றன.
உண்மையை உரைக்கும் குரல்வளைகளுக்கு நேரே துப்பாக்கிக்குழாய்கள் நீட்டப்பட்டாலும்,உண்மையை உரைப்பவர்களை கொன்று வெறி தீர்த்து தெருவோரங்களில் வீசி எறிந்தாலும்,அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல், வன்முறைகளுக்கு துதி பாடாமல் இதயவீணை வானொலிகடந்த நான்கு ஆண்டுகளாக சவால்களை எதிர் கொண்டு எமது மக்களுக்கான தனது பங்களிப்பை செலுத்தி வந்திருக்கின்றது.
உண்மையை மறுப்பவர்கள் ஒன்று திரண்டு எதிரில் நின்றாலும் எமது மக்களின் பக்கம் நின்றுஇதயவீணை உண்மையை உறுதியுடன் உரைத்து வருகின்றது. தனக்கே உரியை வழிமுறையில் தனது சூழ்நிலைக்குள் நின்று எமது மக்களுக்கான இந்த மாபெரும் தியாகத்தை புரிந்து வருகின்றது.
அதே வேளையில் எமது மக்களுக்கு வழிகாட்டியாக நின்று நடைமுறைச்சாத்தியமான வழிமுறையிலான ஒரு அரசியல் பாதையை இதயவீணை காட்டியிருக்கிறது.
எமது அரசியல் இலக்கை அடைவதற்கு எங்கிருந்து தொடங்க முடியுமோ அங்கிருந்துதான் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையோடு, அந்த அரசியல் இலக்கின் ஆரம்பப்படி வரை பல்வேறு சக்திகளையும் அழைத்து வருவதற்கு இயதவீணை பெரும் பங்காற்றியிருக்கின்றது.
அடையமுடியாத இலக்கிற்காகவும், ஆயுதவன்முறைக்காகவும் எமது மக்கள் சமாதானத்தின் எதிரிகளின் பாலாத்காரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்.
இருண்ட சிறையில் வாடும் எமது மக்களை முழுமையாக மீட்டெடுத்து சமாதான தேசத்தை நோக்கி, அமைதியை நோக்கி, அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கி வழி நடத்தி செல்லும் ஐனநாயக சக்திகளுக்கு பக்கபலமாக நின்று தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்பதே இதயவீணையின் வரலாற்று கடமையாகும்.
அச்சமற்ற வாழ்வு, அமைதியான சூழல், அரசியலுரிமை சுதந்திரம் இவைகளுக்காக உழைக்க வேண்டும்.
அர்ப்பண உணர்வோடு எமது தயாக தேசத்தின் இதயவீணையாக உறுதி கொண்டு உழைக்கும் உண்மையின் குரல்களை நான் மனம் திறந்து பாராட்டுகின்றேன்.

ஒன்பதாவது மாகாணசபையினை வடக்கில் விரைவில் ஏற்படுத்துவோம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு


பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்து அங்கு மாகாண சபையை ஏற்படுத்தியது போன்று விரைவில் வடக்கிலும் ஒன்பதாவது மாகாண சபையை ஏற்படுத்துவோம். பாராளுமன்றம், நீதிமன்ற நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே முறுகல் ஏற்பட்டால் அந்த ராஜ்ஜியம் வீழ்ச்சியடையும். இதற்கு இடமளிக்கலாகாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சப்ரகமுவ வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று தெரிவான முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு பதவியேற்றனர். இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மிக விரைவில் வடக்கில் ஒன்பதாவது மாகாண சபை உதயமாகும். அதற்காக எமது படையினர் அர்ப்பணிப்புடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர். கிழக்கை மீட்டோம் இன்று அப்பகுதி மக்களுக்கு அவர்களுடைய தலைமையை வழங்கி ஜனநாயகத்தை வழங்கியுள்ளோம். இதே நிலை வடக்கில் உருவாகுவதற்கான காலம் தொலைவில் இல்லை. இவ்வாறான எமது படையினரின் அர்ப்பணிப்புக்கு மக்கள் மதிப்பளித்து தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். நாட்டின் மீது பற்று கொண்ட மக்களை நாம் மதிக்கின்றோம். தெளிவான, சரியான பாதையை தெரிவு செய்து அதில் பயணிக்கின்றோம். இதனை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். அதற்காக உங்கள் ஒத்துழைப்பு எமக்கு தேவை. மத்திய அரசாங்கம், மாகாண சபை, பிரதேச சபை மூன்றும் இணைந்து செயற்பட வேண்டும். பாராளுமன்றம், நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே ஒற்றுமை இணக்கப்பாடு இருக்க வேண்டும். அப்போதே நாட்டின் சுமுகமான நிலை இருக்கும். இம்மூன்றுக்குமிடையே முறுகல் ஏற்பட்டால் அந்நாடு வீழ்ச்சியடையும். நீதிமன்ற சுயாதீனத்தை நாங்கள் மதிக்கின்றோம். அதேபோன்று பாராளுமன்றத்தின் கடப்பாட்டையும் மதிக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதனை விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற விவாதம் நடத்தப்படுவதில்லை. ஒரு ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கு நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றம், நீதிமன்றத்திற்கிடையே இணக்கப்பாடு அவசியமானதாகும்.

Tuesday, August 19, 2008

பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே படையினர் யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே படையினர் யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.வெகுவிரைவில் வடக்கை விடுவித்துவிடுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
ருவன்வெல்லவில் நேற்று(18) பிற்பகல் நடத்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகியோர் அனைவரும் இந்த நாட்டில் அமைதியாகவும் சகோதரர்களாகவும் வாழவேண்டுமென்ற அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது
இனம், மதம், சாதி, கொள்கை, அரசியல் நலன்கள் ஆகியவற்றுடன் ஒரே குடும்பமாக இந்த நாட்டில் வாழ்வதற்கேற்ற சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப் பட்டுவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
படையினர் யுத்தத்தை முன்னெடுப்பதால் அவர்கள் பயங்கரவாதப் பிடியிலிருந்து பல பிரதேசங்களை விடுவித்து வருகின்றனர்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மக்கள் தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தான் பின்னிற்கப்போவதில்லை நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

வன்னிப்புகைப்படங்களை இஸ்ரேல் “”ஒபெக் செய்மதிப்பிரிவு’ றோ அமைப்புக்கு வழங்கியது

கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடாகிய “”ஸ்ரேற் ரைம்ஸ்’ (State Times) செய்தித்தாள் சார்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் செவ்வி காணப்பட்ட போது பத்திரிகையாளர் ஸ்ரீலங்காவில் தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே வன்னியில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் பற்றியும் எதிர்பார்க்கப்படக்கூடிய யுத்த விளைவு பற்றியும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய பாதுகாப்பு ஆய்வு அமைப்பாகிய “”றோ’ அதன் அறிக்கையில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்ந்து யுத்தம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அறிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “”றோ’ அமைப்பு இந்தப் பாதுகாப்பு நிலைமை ஆய்வை பாதுகாப்புத் தகவல்களின் அடிப்படையில் மட்டும் செய்யவில்லை எனவும் ஸ்ரீலங்கா இராணுவப் படையணிகள் புலிகள் இயக்கத்தின் பலக்கோட்டைகள் எனக்கருதப்படும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்குள் பிரவேசித்து கேந்திரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் “”றோ’ அமைப்புக்குக் கிடைத்துள்ளதாகவும் அத்துடன் புதுடில்லியில் அமைந்துள்ள “”றோ’ தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு புலனாய்வுகளை மேற்கொள்ளுவதற்காகப் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஆயுதக்கருவிகள், உபகரணங்கள் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு களநிலைமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வன்னியில் அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் கேந்திரப் பகுதிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் யுத்தம் மற்றும் அரசபடையினர் வன்னிக்குள் முன்னேறித் தற்போது நிலைகொண்டுள்ள கேந்திரப் பகுதிகள் ஆகியவற்றைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் இஸ்ரேலின் அதிஉயர் தொழில்நுட்பங்கள் கொண்ட “”ஒபெக்’ செய்மதி மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகைப்படங்களை “”ஒபேக்’ செய்மதிச் செயற்பாட்டுப் பாதுகாப்புப் பிரிவு அண்மையில் இந்திய அரச பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு “”றோ’வுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பாதுகாப்புத் தகவல்களுக்கு அப்பால் “”றோ’ அதன் உயர்தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பெற்ற புகைப்படங்கள் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் “”ஒபெக்’ செய்மதி வழங்கிய புகைப்படங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறு பிரபாகரன் தொடர்ந்தும் யுத்தம் செய்யமுடியாத நிலையில் முடங்கிவிட்டதாக “”றோ’ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆதாரபூர்வமான “”றோ’வின் இந்த அறிக்கை காரணமாகவே அண்மையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மேற்படி சிங்கப்பூர் “”ஸ்ரேற் ரைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்று உறுதியாகத் தெரிவித்தார். இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அவர் தெரிவித்த ஏனைய காரணங்களில் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கடத்த முடியாத வகையில் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடற்பிராந்தியங்களில் ஸ்ரீலங்கா கடற்படையினராலும் இந்தியக் கடற்படையினராலும் எடுக்கப்பட்டிருப்பதும் புலிகள் இயக்கம் பலமிழந்துபோய்விட்டதற்குக் குறிப்பிடும்படியான காரணம் எனக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரபாகரனின் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்பதை இந்தியப் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பாகிய “”றோ’ அமைப்பும் இந்திய பாதுகாப்புத்துறை உயர்அதிகாரி ஒருவரும் வெளிப்படையாகக் கூறியிருப்பதும், ஏற்றுக்கொண்டிருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.